Friday, December 12, 2014

நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா?

ஒரு ப்ளாஷ்பேக்… 1989-ம் ஆண்டு நடந்த விழா அது. அன்றைய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, இயக்குநர் பாலச்சந்தர் என பலரும் பங்கேற்ற விழா.

ரஜினி பேசுகிறார்…

“என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்’ என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.

எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். அதே மண்ணில்தான் நானும் பிறந்தேன். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் உள்ளது.

நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர். ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமண மகரிஷி ஒரு தமிழர்.
சிவாஜி ராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து, எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.

வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி.

என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.
எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.

அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்!”

ரஜினியின் இந்தக் கேள்விக்கு அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி சொன்ன பதில்… ‘எங்கள் மண்ணின் மைந்தர்’! என்றார்.

அதைத் திருத்திய கருணாநிதி…’அவர் தமிழகத்தின் மைந்தர்’ என்றார்.

நாச்சிக்குப்பமும் ரஜினியும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் பிறந்த நாளும் அவர் நடித்த படமும் ஒரே நாளில் வந்திருப்பது இதுதான் முதல் முறை.

இந்த ஆண்டும் அவரது அரசியல் வருகை பற்றிய பேச்சு எழுந்து பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை மத்தியில் பி.ஜே.பி. அரசு அமைந்திருப்பதும் நரேந்திர மோடியுடன் ரஜினிக்கு இருக்கும் நட்பும் கூடுதல் பலமாக சேர்ந்து கொண்டு ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சுக்கு வலு சேர்த்திருக்கிறது.


 ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி தோல்வி என்பது ஒரு பக்கமிருந்தாலும், அவர் அரசியல் பிரவேசம் செய்தால் இப்போது அரசியல் சந்தையில் கடை போட்டிருக்கும் பல பழுத்த வியாபாரிகள் தங்கள் கடையை மூட்டை கட்ட வேண்டிய நிலை வரும் என்பதுதான் உண்மை.


 ரஜினி எப்போது அரசியல் பற்றி பேசினாலும், யாரையாவது வைத்து அவருக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்துவார்கள். ‘உங்களி விட சீனியர் உங்கள் நண்பர் அரசியல்ல இருக்கார். அவரை எதிர்த்து எப்படி நீங்கள் அரசியல் செய்ய முடியும்' என்று ரஜினியின் காதில் போட்டு வைப்பார்கள். இன ரீதியாக அவரை தனிமைப்படுத்தும் முயற்சி இது.


காரணம் ரஜினியிடம் நேரடியாக ‘நீ அரசியலுக்கு வந்தால் கர்நாடக முத்திரை குத்திவிடுவோம்'; என்று சொல்ல முடியாதல்லவா. இப்படிதான் ஒவ்வொரு முறையும் ரஜினியை அடக்கி வைத்தார்கள், அரசியல்வாதிகளின் தூதுவர்களாக செயல்படும் வெள்ளித்திரை வியபாரிகள்..


லிங்கா படவிழாவிலும் இதுதான் நடந்தது. கூட்டமே ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புக்கு ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்க, இடையில் பேச வந்த வைரமுத்து ‘ரஜினியை நீங்கள் கடவுள் என்கிறீர்கள், தேவதூதர் என்கிறீர்கள், வருங்கால முதல்வர் என்கிறீர்கள்.. ஆனால் தான் யார் என்பது ரஜினிக்குத் தெரியும்' என்று பேசுகிறார். இது ரஜினிக்கு மறமுகமாக விடப்பட்ட மிரட்டலாகவே அங்கிருந்த ரஜினி ரசிகர்கள் பார்த்தார்கள்.


ஆனால் ரஜினி பேசும்போது. "நான் அரசியலுக்கு வரணும்னு எல்லோரும் பேசுறீங்க. அது பிரச்சனையில்ல. அப்படி வந்து பலரையும் மிதித்து அந்த இடத்துக்குப் போயி உங்களுக்கு நல்லது செய்ய முடியுமான்னுதான் யோசிக்கிறேன்," என்று நீண்ட நாளைக்குப்பிறகு அரசியல் குறித்து கொஞ்சம் வெளிப்படையாகவே பேசினார்.


தன்னுடைய அரசியல் பிரவேசத்தால் அதிகம் பாதிக்க[ப்படப்போவது யார் என்பது ரஜினிக்கும் தெரியும். அதனாலும் அமைதி காத்தார். ரஜினி மீது அரசியல்வாதிகள் ஏவும் பிரமாஸ்திரமான கர்நாடக அம்பும் முறிந்து போய் பல நாட்களாகி விட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ரஜினி பிறந்தது தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கும் கிருஷணகிரியில் இருக்கும் நாச்சிக்குப்பம் என்ற குக்கிராமம்.


இங்கு ரஜினியின் அம்மா, அப்பா வசித்த வீடும் ரஜினி பிறந்த வீடும் இப்போதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன. அந்த வீட்டிற்குள் போனால் இப்போதும் குடும்ப உறுப்பினர்க்ளோடு ஒரு ஓரத்தில் சிவாஜி ராவாக ரஜினி நிற்கும் பழைய போட்டோவைப் பார்க்களாம்.

இந்த தமிழ் மண்ணில் பிறந்த தமிழன்தான் ரஜினி என்பதற்கு அந்த கிராமத்தில் நிறைய சாட்சிகள் இப்போது இருக்கிறது. ரஜினியின் உறவின் நினைவாக இன்றும் அந்த வீட்டில் அவரது தாய் வழி உறவினர்கள் வசித்து வருகிறார்கள்.

அதே கிராமத்திற்கு ரஜினி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் உயர்நிலை குடிநீர் தொட்டியும் கட்டிக்கொடுத்திருக்கிறார். மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு தனியாக தாகம் தீர்க்க வழி செய்திருக்கிறார். இன்னும் தன்னுடைய தாய் தந்தையர் நினைவாக திருமண மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட பணிகளையும் செய்து வைத்துள்ளார்.

காலம் யாரை எங்கு எப்போது கொண்டு வந்து நிறுத்தும் என்று சொல்ல முடியாது. இலங்கையில் பிறந்த எம்.ஜி.ஆரே நம் இதயத்தில் வாழும்போது தமிழ்நாட்டில் நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரஜினி நாடாளக்கூடாதா என்ன?

0 comments:

Post a Comment